Tuesday 23 January 2018

சூரியபுராணம் : பேராற்றலின் உலக வடிவம் (பகுதி -2) - ஆத்மாநாம்


எகிப்து, வட அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் மத்தியில் சூரிய வழிபாடு தொன்று தொட்டு நடந்து வந்துள்ளது. பல நாடுகளை கைப்பற்றிய அரசர்களும், ஆட்சியாளர்களும் தங்கள் குடிமக்களின் நம்பிக்கையை உறுதிசெய்ய எங்கும் பரவியிருக்கும் கதிரவனின் உணர்வை பயன்படுத்தினார்கள். எகிப்தை ஆண்ட பாரோ மன்னர்கள் தங்களை சூரியகுமாரர்கள் என்று அழைத்துக்கொண்டதை போலவே இந்திய மன்னர்களும் தங்களை சூரியவம்சம் என்று அழைத்துக்கொண்டார்கள். மாவீரன் மகாஅலெக்சாண்டர் கூட சூரியனைப்போல் ஆட்சி புரிய வேண்டும் என்று விரும்பினான். பண்டைய கிரீசின் தாய்த்தெய்வம் சிபெலியை குறிக்கும் ஒரு பதக்கம் இதைத்தான் உறுதிபடுத்துகிறது

சந்திரகுப்த மௌரியன் தன்னைகதிரவனின் காவலன்என்றே அறிவித்தான். இந்தியப்பேரரசர் அசோகர் சாரநாத்தில் நிறுவிய நினைவுத்தூண்களில் அடங்கியுள்ள சிங்கத்தலை பல்வேறு பண்பாடுகளை குறிக்கும் ஒரு கூட்டுச் சூரியச்சின்னமாக விளங்குகிறது. முகலாயப்பேரரசர் அக்பரின் தீன் இலாஹி என்ற மதவழிபாட்டு முறையின் மையமாக தெய்வீக கதிரவன் இருந்தது. இந்தியக் கதையான மகாபாரதத்தில் வரும் சூரியபுத்திரனான கர்ணன் சூரியன் போன்று அனைத்தையும் அளிப்பவனாக சித்தரிக்கப்பட்டிருக்கிறான்.

ஒருவகையில் பார்க்கப்போனால் இயற்கையின் ஓரங்கமாக விளங்கும் மலைகளும், மலர்களும், பறவைகளும், விலங்குகளும், கதிரவனோடு தொடர்புபடுத்தியே பார்க்கப்பட்டு வந்துள்ளன.

சூரியனும், சூரிய தேவதைகளும் வாழ்வதாக கூறப்படும் சொர்க்கத்தை அடைய தேவைப்படும் ஏணியாக மலைகள் கருதப்பட்டன. எகிப்தில் ஆகாயக் கடவுளின் ஏணி கதிரவனின் கதவுவரை செல்வதாக கருதப்பட்டது. ஆரம்பகாலத்தில் படைக்கப்பட்ட படிகட்டுகளால் ஆன பிரமிடுகள் காலத்திலேயே இக்கருத்துக்கள் தோன்றிவிட்டது. சீனப்பேரரசானான -டி-சான் டோங் தீபகற்பத்தில் உள்ள கிழக்குமலை கடலில் தோன்றும் கதிரவனை வழிபட அடிக்கடி சென்று வந்தார். புராதன ஜப்பானின் மலைக்கடவுள் யாமா-நோ-காமியை வனங்களின் கதிரவன் என்றே வழிபட்டனர்.

வானில் பறந்து செல்லும் பறவைகள் இயல்பாகவே சூரியனுடன் தொடர்புடையதாக கருதப்பட்டன. பாமீர் மலையின் சாக்தி குகையில் உள்ள எழுத்துக்களில் விநோதமான பறவைகள் கதிரவக்குறியீடுகளுடன் செதுக்கப்பட்டுள்ளதை உதாரணமாக கூறலாம். ரஷிய நாடோடிக்கதை ஒன்றில் வரும் அதிசயமான பறவை ஒன்று அதீத வலிமை கொண்டதாக இருக்கிறது. அதன் இறகுகளில் ஒன்று மட்டுமே இந்த உலகை கதிரவஒளி எனும் மகிழ்ச்சியினால் நிரப்புவதாக நம்பப்படுகிறது. புராதன எகிப்தில் குறிப்பிடப்படும் ஒருவகை நாரையான பென்னு கதிரவனின் அடையாளமாகவும், மரணத்தை வெல்வதற்கான குறியீடாகவும் கருதப்படுகிறது, ஃபீனிக்ஸ் என்கிற பிரபலமான பறவையும் இதுதான். ரோமானிய பேரரசின் நாணயத்தில் அதன் உருவம் பொறிக்கப்பட்டிருக்கிறது. ஃபீனிக்ஸ் பறவைக்கு சீனமொழியில்ஃபெஸ் அல்லது சி-லின்என்று பெயர். இஸ்லாமிய புராணங்களில் அதன் பெயர்ருக் ஓரங்க’. இந்தியாவிலும், தென்கிழக்கு ஆசியாவிலும் ஃபீனிக்ஸ் பறவையின் குறியீடாக கருடன் கருதப்படுகிறது.  ஹியரகான் போலிஸ் அரசன் நார்மர் கதிரவக்கடவுளான ஹோரஸை குறிக்க வல்லூறு பறவையின் வடிவத்தை வெளியிட்டுள்ளார். கிறிஸ்துவுக்கு முன்னதான 3000 வருடத்தை சேர்ந்த இந்த வடிவம்தான் இதுவரை கிடைத்தவற்றிலேயே மிகவும் பழமை வாய்ந்ததாகும்.

புராதன எகிப்து நாட்டின் சிற்பங்கள் மட்டுமல்லாது ஏனைய நாட்டு கட்டிடக்கலை வடிவங்களும் கதிரவனால் பெரும் பாதிப்புகளை பெற்றுள்ளன. நான்காவது நூற்றாண்டிலேயே கதிரவ ஒளி வருவதை அடிப்படையாகக் கொண்டு, தேவாலயங்களின் கட்டுமானத்துக்கு கிறிஸ்தவ பொருள் தரப்பட்டது. கிறிஸ்தவ தேவாலயங்களும், அதன் பலிபீடங்களும் குறிப்பாக ‘விருந்து தினத்தன்று’ சூரியன் தோன்றும் திசையில் இருக்குமாறு அமைக்கப்பட்டன. பிரான்சுக்கு தென் மேற்கிலுள்ள பிராம் என்ற ரோமானிய நகரம் கி.பி.நான்காம் நூற்றாண்டில் கதிரவனின் அமைப்பில் கட்டப்பட்டது. நாடோடிகளின் யூர்ட் அல்லது மேற்கூரையில் உள்ள வடிவத்துளை கதிரவ வழிபாட்டுடன் தொடர்புடையது.   

கதிரவனின் தோற்றத்தை காணும் வகையில் தேவாலயங்களின் வாயில்கள் கிழக்கு நோக்கியதாக அமைக்கப்பட்டன. ஐரோப்பாவின் மத்தியகால நகரங்கள் ஒரு தேவாலயத்தை சுற்றி வட்டவடிவில் அமைக்கப்பட்டதற்கு சூரியனே தூண்டுதலாக இருந்தது. உள்வட்டமாக அமைக்கப்பட்ட வட்டவடிவமான குறுக்கீடுகள் ஜோராஸ்டிரிய சக்கரங்களை நினைவுபடுத்துபவையாக உள்ளன.

மனிதகுல வரலாற்றிலேயே சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது தான் மிகவும் முன்னோக்கியதாக கருதப்படுகிறது. சூரியவட்டம் சுமேரியர்களுக்கு குயவர் சக்கரம் உருவாக்குவதற்கான உந்துசக்தியாக மாறியது, தீ நாக்குகளுடைய கதிரவனின் பிம்பம் பற்சக்கரங்கள் உருவாக காரணமாக அமைந்தது. Gears எனப்படும் இந்த பற்சக்கரங்கள் தான் இயந்திரமாக்கப்பட்ட தொழிற்சாலைகளின் மூலதனமாக இருந்து வருகிறது. இத்தகைய வட்டங்களும், வட்ட அடுக்குகளும் தான் ஆரம்பகால சித்திர எழுத்துக்கள் உருவாக காரணமாக அமைந்தன. இந்த வளைய வடிவங்கள்தான் பின்னாட்களில் ஆன்மிக ஒளியின் அடையாளமான ஒளிவளையமாக மாறியது.

பழங்கால அரசர்களில் பலர் சூரியனுக்கு தனிகோவில்களே எழுப்பியுள்ளனர்தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டம் திருமங்கலங்குடியில் முதலாம் குலோத்துங்க சோழனால் சூரியனுக்கென்று உருவாக்கப்பட்ட  சூரியனார் கோவில் உள்ளது. 13-ஆம்நூற்றாடிலேயே கங்க வம்சத்தை சேர்ந்த முதலாம் நரசிம்மன் கோனார்க்கில் சூரியக்கோவிலை கட்டிவைத்துள்ளான். 16-ஆம் நூற்றாண்டில் சோளங்கி வம்சத்தாரால் குஜராத்தில் முதேரா சூரியக்கோவில் கட்டப்பட்டது. வட குஜராத்திலும், ராஜஸ்தானிலும், வங்காளத்திலும், காஷ்மீரத்திலும் பழங்காலத்தில் கட்டப்பட்ட சூரியக்கோவில்கள் உள்ளன.

இந்தியநாட்டில் கடைபிடிக்கப்படும் சூரிய நமஸ்காரம் 12 படிகளுடன் ஏழுவகை ஆசனங்களை கொண்டதாக இருக்கிறது. இந்தியநாட்டில் சூரிய ஆற்றலை பெறுவதற்காக சூரிய நமஸ்காரம் செய்யும் முறையானது பன்னெடுங்காலமாகவே இருந்து வந்திருக்கிறது. சூரிய நமஸ்காரம் செய்வதில் பொதுவாக இரண்டு வகைகள் கடைபிடிக்கப்படுகிறது. முதல் வகை 12 நிலைகள் கொண்டதாகவும், இரண்டாவது வகை 10 நிலைகள் கொண்டதாகவும் அமைந்திருக்கிறது. சூரிய நமஸ்காரத்தின் இரண்டாவது வகை அனைத்து வயதினருக்கும் ஏற்ற முறையில் அமைந்திருக்கிறது.

1.   நமஸ்கார விருக்ஷாசனன் (1-12 நிலைகள்)
2.   அர்த்த பிறையாசனம் (2-11 நிலைகள்)
3.   உத்ராசனம் () பாதஹச்தாசனம் (3-10 நிலைகள்)
4.   யோக தண்டாசனம் (4-9 நிலைகள்)
5.   அதோ முக சவாசனம் (5-8 நிலைகள்)
6.   ஹ்ருதயாசனம் (சாஷ்டாங்க நமஸ்காரம்) (6 நிலை)
7.   புஜங்காசனம் (7ஆம் நிலை

ஆண்மையின் குறியீடான புல்லாங்குழலும், பெண்ணின் கருப்பையை குறிக்கும் பறையும் (Drum) இரண்டுமே சூரியனை உருவகம் செய்கின்றன. இவை இனவிருத்தி, மகிழ்ச்சியான வாழ்க்கை, மறுபிறவி என்பதாக பொருள்கொள்கின்றன. பிரபஞ்சத்தின் நான்கு பகுதிகளை குறிப்பிடும், நான்கு நாட்டியக் கலைஞர்கள் பங்குகொள்ளும் சூரியநடனத்தில் பெரும்பாலான கலாச்சாரங்களில் இடம் பெறுபவை புல்லாங்குழலும், பறையும் தான்.

இசைமேதை மொசார்ட்டின் The Majic Flute மாயப்புல்லாங்குழல் என்ற இசைநாடகமும் இதைதான் வெளிப்படுத்துகிறது. இருள் மற்றும் ஒளி என்ற இரு பகுதிகளாக பிரிக்கப்பட்ட அதில் வலிமை வாய்ந்த சூரியவட்டத்தின் ஏழு சுற்றுகளின் மையப் போராட்டம் பற்றி கூறப்பட்டுள்ளது

உலகின் பலபகுதிகளின் திருவிழாக்களும், ஊர்வலங்களும், வேளாண்மை மற்றும் கருத்தரிப்பு சடங்குகளும் சூரியனுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றன. ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்காவை சேர்ந்த சமூகங்களின் ஊர்வலங்களில் சூரியக் குறியீடுகளை கொண்ட விலங்குகள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. இவைகள் புராதன சூரியவழிபாட்டு முறையில் இருந்து தோன்றியவைகளாகும். சொராஷ்டிர சமயத்தில் காணப்படும் நெருப்பு வழிபாடும் இப்படிப்பட்ட ஒன்றுதான். வானத்தில் சூரியன் ஆற்றும் அதே பணியினை பூமியில் நெருப்பு ஆற்றுவதாக அவர்கள் நம்பினார்கள். ஈரானின் யாஸ்டியிலுள்ள புனிதமான சொராஷ்டிர கோவிலின் உள்ளே எரியும் நெருப்பு 3000 ஆண்டுகளாக அணையாமல் எரிவதாக கூறுகின்றனர்.இப்படி அடிக்கடி தோன்றும் உருக்காட்சிகளில் சூரியன், சந்திரன் மற்றும் கோளங்கள், விண்மீன் கூட்டங்கள் போன்ற விண்வெளியுடன் தொடர்புடைய பலதும் வருவதுண்டு. அவற்றில் சூரியனே தலையாய இடத்தை பெற்றுள்ளதுஉலகப்பொருட்களின் தோற்றத்துக்கும், முடிவுக்கும் அன்றாடவாழ்வில் ஒளியின் மூலம் இருளை வெற்றி கொள்வதற்கும், இரவின் அச்சங்களுக்கும் சூரியனே காரணம் என கருதப்படுகிறது.

சூரியனின் செறிவில் ஏற்படும் பெரும் மாறுதல்களினால் அது ஒரு அடிவானத்திலிருந்து இன்னொன்றுக்கு செல்வதாகவும், வைகறையின் மங்கிய வெளிச்சத்திலிருந்து நண்பகல் உச்சிவெயிலுக்கும், மாலை அந்தி வெளிச்சத்துக்கும் மாறுவதாக தோன்றுகிறது. சூரியன், இடம் சார்ந்த திசைகளையும், பொழுதுகளின் பகுப்புகளையும் குறித்துக்காட்டுவது மட்டுமல்லாமல் அனைத்துக்கும் மேலாக பொருள்களை கண்ணால் பார்க்க கதிரவன் உதவுகிறது. ஒளியையும் வெப்பத்தையும் அது கொண்டுவருகிறதுபண்டையகால நம்பிக்கையின்படி கண்கள் தான் பார்க்கும் பொருளுக்கு ஒளியூட்டுவதாக நம்பப்பட்டது. இதனால்தான் கதிரவனை கண் என்றும் , ஒரு பார்வையாளன் என்றும் குறிப்பிட்டனர்.

அச்சமூட்டும் தோற்றத்துடன் வலம்வருவதாக கருதப்பட்டரேஎன்ற கதிரவக் கடவுளை சூரியனின் கண் என்றே எகிப்தியர்கள் நம்பினார்கள். கிரேக்கரின் சூரியக்கடவுளின் கண்ணும் கதிரவன் தான். அதன் பார்வையிலிருந்து எதுவும் தப்புவதில்லை.

நட்சத்திரங்களிலேயே பூமிக்கு மிகவும் அருகில் இருக்கும் நட்சத்திரம் சூரியன் தான். அதன் காரணமாகத்தான் சூரியன் குறித்த பல்வேறு கதைகளும், காரணங்களும், தொன்மங்களும் இன்றுவரை தோன்றியவண்ணம் இருக்கின்றன. அப்படிப்பட்ட சூரியனை வலிய சக்தியுள்ளவனென்றும், உலகுக்கே வாழ்வளிப்பவனென்றும், பிரபஞ்சத்தின் நடுநாயகனென்றும் சூரிய மையத் தத்துவத்தை பிரகடனம் செய்த கோப்பர்நிக்கஸ் வர்ணித்தார். அதை கண்கூடாக இந்த உலகம் ஒப்புக்கொள்ள பயணித்த காலம் பல நூறு ஆண்டுகள். 

ஆனால் இன்றைய விஞ்ஞானம், சூரியனை அதன் உபகோள்களை அக்கு வேராகவும், ஆணி வேராகவும் ஆராய்ந்து தீர்ப்பு கூறிவிட்டது. சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். ஏனைய நட்சத்திரம் போல் அது இருந்தாலும், பூமிக்கு அருகில் உள்ள ஒரே நட்சத்திரம் சூரியன் மட்டுமே. சூரியனில் இருந்து கிடைக்கும் வெப்ப ஆற்றல்தான் இந்த பூமியில் உயிரினங்களை, புல், பூண்டு, பூச்சுக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைய உலகுசார்ந்த நவீன தொழில்நுட்ப சாத்தியப்பாடுகள் அனைத்தின் அடிப்படையில் நடத்தப்பட்டுள்ள சூரிய ஆய்வுகள், அதன் பல பரிமாணங்களை வெளிச்சமிட்டு காட்டியுள்ளது. அது கதிரவனின் தோற்றம் ; தோன்றுவதற்கு முன் இருந்த நிலை ; அதன் நடுமையத்தில் என்ன நிகழ்கிறது ? மேற்பரப்பில் என்ன நடக்கிறது ? மேலும் அதன் சுற்றுவட்ட பாதைகளில் என்ன விதமான செயல்பாடுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது ? என்பதை துலக்கமாக படம் பிடித்து காட்டியுள்ளது. 


சூரியன் விண்மீன் வகைபாட்டில் G2V வகையை சார்ந்ததாகும். G2 வகை விண்மீன்களின் மேற்பரப்பு வெப்பநிலை தோராயமாக 5,500°c ஆக இருப்பதால் வெண்மை நிறத்தில் ஒளி தரும். பூமிக்கு வந்து சூரிய ஒளியின் நிறமாலையில் உள்ள ஊதா மற்றும் நீல நிறங்களின் அலைநீளம் அதிகமாக இருப்பதனால் அவை ஒளிச்சிதறல் விளைவால் குறைக்கப்பட்டு மனிதக் கண்களுக்கு மஞ்சள் நிறமாகத் தெரிகிறது. இதே ஒளிச்சிதறல் விளைவாலே வானம் நீல நிறமாக இருக்கிறது. உண்மையில் அண்டவெளி கருமை நிறத்தினைக் கொண்டது. சூரியன் பூமியில் மறையும் தருவாயில் குறுகிய அலை நெடுக்கத்தைக் கொண்ட சிவப்பு நிறம் ஒளிச்சிதறல் விளைவால் சூரியனை செம்மஞ்சள் நிறமாகவோ அல்லது சிவப்பு நிறமாகவோ காட்டுகிறது.


(தொடரும்)





No comments:

Post a Comment