Thursday 8 March 2018

ஐவகை நிலத்தின் கதை


’ஐவகை நிலத்தை கட்டியாண்ட தமிழனின் பெருமை’ என்று எனது ‘தமிழ் நிலம்’  நிகழ்ச்சியின் முன்னோட்டம் ஒன்றில் கூறியிருந்தேன். அதனை இப்போது மாற்றிச் சொல்லவேண்டிய நிலமைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். ஐவகை நிலத்தையும் தமிழர்கள் கட்டியாண்டது அன்று. இன்று தமிழ் முதலாளிகளே ஐவகை நிலத்தினையும் கட்டியாள்கிறார்கள். இன்னும் கொஞ்சம் தெளிவாகச் சொல்லப்போனால் பன்னாட்டு நிறுவனங்களுடன் (Multinational Companies) சேர்ந்த தமிழ் முதலாளிகளே குறிஞ்சி முதல் பாலை வரையிலான நிலங்களையும், அதன் செல்வங்களையும் அரசின் துணையுடன் பங்கு போட்டுக் கொள்கிறார்கள்.

குறிஞ்சி நிலம் இன்னக்கி குவாரியா மாறிடிச்சி
முல்லை நிலத்துல தொழிற்சாலைகள் முளைச்சிடுச்சி
மருத நிலம் பூரா ஃப்ளாட் போட்டு வித்தாச்சி
நெய்தல் நிலம் கூட அமிலக்கழிவுகளா ஆயிடிச்சி
பாலை நிலமெல்லாம் லாரிகளுக்கு பட்டாவா போச்சி
இனி எல்லா நிலத்துக்கும் தனித்தனியா எதுக்கு பேரு
இருக்கவே இருக்கு சுடுகாடுன்னு அழகான ஒரு பேரு 


தமிழன் கட்டியாண்ட  ஐவகை நிலங்களின் தற்போதைய நிலைமையை நெனச்சா நெஞ்சம் கனக்குது...அடிவயிறு குமுறுது... இந்த நெலமைக்கு யார் யாரெல்லாம் காரணம். அரசியல்வாதிங்க.. அடுத்து ஊழல் பேர்வழிங்க.. அதெல்லாம் உண்மைதான். ஆனா இப்போதைக்கு இப்படி சொல்றத விட்டுட்டு கொஞ்சம் நம்மளோட சுயத்தை உரசிப் பாப்பமா? வரலாற்றை படைக்கிறது மக்கள் தான்னு நம்பியிருந்தோமே. அந்த உண்மையை கொஞ்சம் உரல் கல்லுல வெச்சி இடிப்பமா..

இயற்கையோடு இணைஞ்ச வாழ்க்கையை நவ நாகரீக மாய்மாலங்களுக்கு அடகு வெச்சிட்டு இன்னக்கி வந்து ’எல்லாம் போச்சேன்னு கூப்பாடு போட்றது இந்த மக்கள் தானே. மறுக்கமுடியாத வகையில் அவர்களும் தானே இதோட அங்காளி பங்காளி. ’மனிதன் இயல்பிலேயே ஒரு சுயநலப்பிராணி’ன்னு ஒருத்தன் பொட்டுல அடிச்சா மாதிரி சொல்லிட்டு போனான். இப்பிடி விட்டேத்தியான ஒரு மக்கள் கூட்டம் தானே இந்த நெலமையை நம்ம எல்லோரோட வாழ்விலும் கொண்டு வந்து சேத்துச்சி.

அன்னிக்கி நம்ம வீட்லயிருந்து ஒருத்தன் ரியல் எஸ்டேட் பண்றன்னு கிளம்பிப்போய் ’செம்ம’ கமிஷனோட வீடு திரும்பினானே. அப்ப ”எப்பா..எங்க வீட்டு புரோக்கரு. நீ யாரு கிட்ட நெலத்த புடுங்கி யாரு கிட்ட எதுக்காக விக்கப்போற”ன்னு ஒருக்கா நாம கேட்டமா. நாயி வித்த காசு குலைக்காதுன்னு தான சூ.... வாய மூடிக்கிட்டு சும்மா கெடந்தோம்.

நம்ம சித்தப்பு ஒருத்தன் புதுசா லாரி வாங்கி திருட்டு மணல் அடிச்சி, அதுல புதுவீடு கட்டி கிரகப்பிரவேசம் போனப்ப, குடும்பத்தோட போய் நெய் பொங்கல் சாப்பிட்டு மொய் எழுதிட்டு வந்தமே.. அதெல்லாம் அத்தோட போயிடுச்சா. இல்ல அவன் கிட்ட ‘மண்ண விக்கிறதும் நம்ம வீட்டு பொண்ண விக்கிறதும் ஒண்ணு’ன்னு உறைக்கிறா மாதிரி கேட்டு காறித்தான் துப்பணுமா.

காணும் பொங்கல் அன்னிக்கி மட்டும் எல்லோரும் கடற்கரைக்கு போய் சுண்டல் வாங்கி தின்னுட்டு ’நாங்கள்ளாம் ஃபேமிலியோட பீச்சுக்கு போனோமே’ன்னு சுத்துபட்டுல பீத்திகிட்டமே.. அப்ப கடல் செத்துகிட்டிருந்தது பத்தியோ..அதோட காவல் அரண்களாக இருக்கற மீனவ சமுதாயம் அவலத்துல அழியறது பத்தியோ யோசிச்சமா.

’ஊருக்குள்ள புதுசா ஒரு ஃபேக்டரி வருதாம்.. ஊர்லயிருக்கறவன் எல்லாருக்கும் வேலை தருதாம்’னு கண்ண மூடிக்கிட்டு அந்த தொழிற்சாலைக்கு பட்டு விரிச்சமே. இப்ப கோக்கு, மினரல் வாட்டருன்னு எல்லா தண்ணியையும் அவன் உறிஞ்சிட்டு போனதுக்கப்புறம் ‘அய்யய்யோ..நெலத்தடி நீர் கொறஞ்சி போச்சே’ன்னு ஒப்பாரி வைக்கிறோமே.. நெசமாலுமே நாம எல்லோரும் வாயில வெரலு வெச்சாக்கூட சூப்பத்தெரியாத அப்ப்பாவிங்களா..

குவாரில கல்லொடைக்க தெரிஞ்ச நமக்கு அத ஏலம் எடுத்தவன எத்தி வெளையாட தெரியாதா..இந்த கிரானைட் குவாரில சம்பந்தப்பட்டவன் தானே மெரீனா பீச்சுல போய் தவம் பண்றான். மௌனவிரதம் இருக்கறான். விவசாய நெலத்துல தண்ணிய உறிஞ்சி வித்தவன் தானே இன்னிக்கு டிவி சேனல் நடத்தறான்.. சின்ன சின்ன வியாபாரிங்களோட வயித்தல அடிச்சவன் தானே இன்னக்கி சபையில வந்து உக்காந்துக்கினு சமூகப்பிரச்சினைகளை பத்தி விவாதம் பண்றான். தமிழர் தந்தையோட பத்திரிகை நடத்தற டிவி சேனல்னு சொல்லிட்டு தானே தமிழனுக்கு எதிரான எல்லாத்தையும் விவாதம்கற பேர்ல அரங்கேத்திட்டு வர்றான். 

பல நேரங்கள்ல நாம அணிஞ்சிருக்குற முகமூடிய பத்தி நாம யோசிச்சி பாத்தமா..கண்ணுக்கு தெரியாத அபாயத்தின் வெளிப்பாடான ஒரு நிகழ்ச்சியில நாம வெறும் பார்வையாளர் மட்டுமல்ல பங்கேற்பவர்களும் தான் என்பது தெரியாதது நம்மோட அறியாமைன்னு சொல்லிட்டிருக்க போறோமா? இல்ல..மனிதர்களோட சுயநலத்தினால விளைஞ்ச சதின்னு ஒத்துக்க போறோமா? 

குறிப்பு : 

மலையும் மலை சார்ந்த இடமும் - குறிஞ்சி இன்று குவாரி
காடுகளும் காடு சார்ந்த இடமும் - முல்லை இன்று தொழிற்சாலைகள்
வலலும் வயல் சார்ந்த இடமும் - மருதம் இன்று வீட்டுமனைகள்
கடலும் கடல் சார்ந்த இடமும் - நெய்தல் இன்று அமிலக் கழிவுகள்
மணலும் மணல் சார்ந்த இடமும் - பாலை இன்று லாரிகள் 

(மேற்கண்ட Raja Sekar- ன் முகநூல் பதிவுக்கான எனது எதிர்வினை)

No comments:

Post a Comment