Saturday 10 March 2018

தீ


அவளிடம் நான் ஒரு
பூவைக் கொடுத்தேன்
அவள் அதைத்
தீப்பொறியாக மாற்றினாள்
அதன் நறுமணம் சீறியெழுந்து
ஒளிப்பிழம்பாகக் கனன்றது
அதன் மென்மை
என் முகத்தில் காறி உமிழ்ந்தது
அவள் சொன்னாள் ;
எழுதுங்கள் தீ
படிப்பறிவில்லா சில
தொழிலாளர்கள்
வயல்களில் நாள் முழுதும்
பாடுபட்ட களைப்போடு
தலைகளைச் சாய்த்துக் கொண்டு
தமது கரும்பலகைகளில்
எழுதுகுச்சிகளால்
தட்டுத் தடுமாறி  எழுதினார்கள்
தீ
மீண்டும் அவள் சொன்னாள் ;
இன்னொரு தடவை தெளிவாக
எழுதுங்கள்தீ
தலைகளைச் சாய்த்துக் கொண்டு
அவர்கள் எழுத ஆரம்பித்தார்கள்
இம்முறை
அதிக நம்பிக்கையோடு
கரும்பலகைகளின் மேல்
நகரும்
அவர்களின் விரல்கள்
தீச்சுடர்களாக மாறியதை
நான் கண்ணுற்றேன்.
அந்த சொல்லை
எழுதி முடித்தபோது
அவர்களுடைய கைகள்
தீப்பந்தங்களாக
ஒளிர்ந்து கொண்டிருந்தன. 
இதோ உங்களுக்கு தேவையானால்
இப்போது எடுத்துக் கொள்ளுங்கள்
சொல்லிக்கொண்டே அவள்
அந்தப் பூவைத் திரும்ப
என்னிடம் கொடுத்தாள்.

No comments:

Post a Comment