Sunday 11 March 2018

சேரி

சி. இராஜாராம் 


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலஞ்சேரிஎன்னும் ஊர்ப் பெயர் உண்டு. சென்னையில் வேளச்சேரி, சேலத்தில் மேச்சேரி என்னும் ஊர்ப் பெயர்களும் உண்டு. கொச்சியில் மட்டாஞ்சேரிஎன்ற ஊர் உண்டு. சிவகங்கை சமீனில் இரவுச்சேரி நாடுஎன்ற பகுதி இருந்துள்ளது. கேரளாவில் சங்கனாச்சேரிஎன்ற ஊர் உண்டு. பரமக்குடிக்கு அருகில் பெரும்பச்சேரிஎன்ற ஊர் உள்ளது. நாகர்கோவிலில் ஒழிகினச்சேரிஎன்ற ஊர் உண்டு.

தமிழகத்தில் பனங்காட்டுச் சேரி, பனஞ்சேரி, பனையஞ்சேரி ஆகிய பெயர்கள் உள்ளன. கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வயல்களுக்கு நடுவே உள்ள சிறிய ஊர் புரவசேரி. நாகர்கோவிலின் ஒருபகுதி, அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் வடசேரிஎன்ற ஊர் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவானை வட்டத்தில் இப்போது வீரநாராயண மங்கலம் என்ற ஊரின் பழைய பெயர் வீரநாராயணன் சேரி’.

கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டத்தில் வீமனேரி: வீரநகரி, ‘வீமனசேரி’, உள்ளதை அறியலாம். நாஞ்சில் நாட்டில் கி.பி.1472ம் ஆண்டு அடிமை ஓலைப் பிரமாணம் ஒன்று தென்னாட்டுக் குறுநாட்டு ஆளூர் சேரியில் வாழ்ந்த பறையர் சாதி என்று குறிப்பிட்டுள்ளதில் ஆளூர் சேரியைக் காணலாம்.
பெருங்குன்னூர்க் கிழார் குடக்கோ இளஞ்சேரிரும்புரை என்ற மன்னனின் பெயரில் சேரிஎன்ற சொல் பொதிந்துள்ளதைக் காண்க.

இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தை அரும்பத உரையுடனும், அடியார்க்கு நல்லார் உரையுடனும் தென்கலைச் செல்வர் டாக்டர் உ.வே.சாமிநாதையர் வெளியிட்டார். அதில் சேரிப் பரதர் வலை முன்றில்கூறப்பட்டுள்ளது. சேரிப்பரதர்….. பரதர் என்னும் வகுப்பினர் மட்டும் சேர்ந்து செறிவாக வாழ்ந்ததால் சேரிஎனப்பட்டது. இதுபோல் பார்ப்பனச் சேரி, ஆயர்சேரி என்றும் பண்டு அழைக்கப்பட்டுள்ளன. இன்றும் வடுகச்சேரி, செட்டிச்சேரி என்னும் ஊர்கள் இருப்பதையும் நினைவில் கொள்க.

சோழர் காலத்தில் அவரவர் சாதிக்குப் பின்னால் (கிராமத்தை) தூய தமிழில் சேரி என்னும் பெயரைச் சேர்த்துக்கொண்டனர். அந்த வகையில் கண்மானச்சேரி, பறைச்சேரி, ஈழச்சேரி, வலைச்சேரி மற்றும் தீண்டாச்சேரி ஆகியவை உருவாயின. தீண்டாச்சேரி என்பது கைவினைஞர் குடியிருப்பு, பறையர் குடியிருப்பு, ஈழவர் குடியிருப்பு, வலைஞர் குடியிருப்பு மற்றும் தீண்டத்தகாதோர் குடியிருப்பு ஆகியவை. பார்ப்பனர் குடியிருப்புக் கூட, ‘சேரிஎன்ற நிலையில்தான் குடியிருப்புகள் அமைந்திருந்தன.
வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக, ஆதிக்க சாதிகளால் கூறப்படும் உத்திரமேருர் வைகுந்த பெருமாள் கோயில் கல்வெட்டு கி.பி. 14ம் நூற்றாண்டின் முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக் காலத்தில் கூட, இந்த 12 சேரிகளிலுமுள்ள முப்பது குடும்பத்துக்கும் குடவோலை முறைப்படி தேர்தல் நடந்ததாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவ்வகையில் மேற்கண்ட குடியிருப்புகளும் சோழர்காலத்தில் உயர்குடி மக்களாகவே வாழ்ந்துள்ளனர்.
உத்திரமேரூருக்கு ஒரு கிலோ மீட்டர் முதல் இரண்டு கிலோ மீட்டருக்கு அப்பால் கிழக்கில் அருணாச்சலப்பிள்ளை சத்திரம் சேரி, தென் கிழக்கில் நல்லூர்ச்சேரி, தெற்கில் குப்பைய நல்லூர் சேரி, மேட்டுச்சேரி, காட்டுப்பாக்கம் சேரி, மேற்கில் வேடபாளையம் சேரி, வடக்கில் மல்லிகாபுரம் என்கிற கீழ்சேரி (இது மல்லிகாபுரத்திற்கும் உத்திரமேரூருக்கும் நடுப்பகுதியில் வயல் வெளியில் அமைந்த சேரிப்பகுதியாகும். சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போதுள்ள இடத்திற்கு இடம் பெயர்ந்ததோடு 1970களில் மல்லிகாபுரம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது). இதையொட்டி மேற்கில் கல்லஞ்சேரி என்கிற கல்லமா நகரின் பெயரும் 1970களில் மாற்றப்பட்டதாகும். மேற்கண்ட அனைத்துக் குடியிருப்புகளும் பறையர் குடியிருப்புகளாகும்.

கேரளத்தின் பறையடிமை ஆவணங்களில் அடிமையானவர்களைக் குறிப்பிடும்போது சேரமாதேவிப் புறஞ்சேரியில் கிடக்கும் பறையரில்என்றும் (1459), ‘ஆளூர் புறஞ்சேரியில் கிடக்கும்… (1472, 1728) என்னும், ஆரைவாய் பாலபொய்கை புறஞ்சேரியில் கிடக்கும்…… என்றும் (1827), தாழைக்குடி பெரும் பறைச்சேரியில் கிடக்கும்என்றும் (1832) குறிப்பிடப்படுகிறது. இவற்றில் கூறப்பட்டுள்ளபடி கி.பி. 14ம் நூற்றாண்டுகளில் கேரளாவில் சேரியில் குடியிருந்தவர்கள் பறையரே என்பதைச் சுட்டுகிறது. இன்றும் கேரளாவில் சேரிஎன்ற பொருள் கூறும் ஊர்ப் பெயர்கள் பல உண்டு.

போதி சத்தர் கோதமர் பின்னர் புத்தர் ஆனார். அவன் முன் பிறவிகளைப் பற்றியவையே ஜாதகக் கதைகள் என்பது. இக்கதையில், இவர் சேரி நாட்டில்பானை சட்டி விற்பவராகப் பிறந்து ஆந்தபுரம் (ஆந்திரம்) சென்றார் என்று கூறப்படுகிறது. இக்கதையின் கூற்றுப்படி சேரிநாடுஎன்று ஒன்று இருந்துள்ளதை அறியமுடிகிறது.

தமிழ் ஆடற்கலை 1925 வரை சின்னமேளம்/சதிர்க்கச்சேரி என்றே அழைக்கப்பட்டது. அப்பெயரை மாற்றி பரதநாட்டியம்எனப் புதுப் பெயரிட்டவர் ஈ.கிருஷ்ண ஐயர். தமிழர் ஆடற்கலைக்கு, பரதநாட்டியம் என்று பெயர் வைத்ததை கண்டித்து பாரதிதாசன்  பல நூல்களில் விளக்கி அவரைக் கண்டித்துள்ளார். தமிழ் ஆடற்கலையான சின்னமேளம்/சதிர்க்கச்சேரி பெயர்களில் உள்ள சேரி/மேளம்என்ற சொற்களை நோக்குக.

சிலம்பில் மாதவிக்குப் பொன் அளிக்கப்பட்ட செய்தியைப் பேசும் இளங்கோவடிகள், ‘இக் கோவிலில் உள்ள ஐவர் மலைத் தேவருக்கு அவிப்புறம் முதலியவற்றிற் கென குவளைச் சேரியைச் சேர்ந்த வட்டம் வடுகி என்பவர் இரண்டு கழஞ்சு பொன் அளித்துள்ளார்என்ற கல்வெட்டுக் குறிப்பின் வாயிலாக, குவணச்சேரி என்ற ஊர் இருந்துள்ளதை அறிகிறோம்.

பண்டைத் தமிழகத்தில் சேரிகளில் குடியிருந்த மக்கள் பல இன, மொழி, பண்பாட்டைக் கொண்டவராக இருந்தனர் என தொல்காப்பியம், அகம், புறம், பரிபாடல், மதுரைக் காஞ்சி, சிலப்பதிகாரம் ஆகிய பல இலக்கியங்களில் பரவலாகக் குறிக்கப்பட்டுள்ளன.

கலைமகிழ் ஊரான் ஒலிமணி நெடுந்தேர்
ஒல்லிழை மகளிர் சேரிப் பண்ணாள். (அகம் 146-5-6)
பாடுவார் பாக்கங் கொண்டென
ஆடுவார் சேரியடைந்த தென. (பரிபாடல் 7-32)
மீன் சீவும் பாண் சேரி’ (புறம் 348-4)
வலை வாழ்நர் சேரிவலை வணங்கும் முன்றில் (சிலம்பு கானல் 4-60 சிலம்பு கானல் – 38)
உறை கிணற்றுப் புறஞ்சேரி’ (பட்டினப்பாலை -75)
மன்றுதோறும் நின்ற குரவைச்சேரி’  (மதுரைக்காஞ்சி -615)
சேரிவாழ்வின் ஆர்ப்பெருந்தாங்கு (மதுரைக்காஞ்சி – 619)

என இலக்கிய நூல்கள் கூறியுள்ள சான்றுகளைப் பார்த்தால் சேரிகளில் வாழ்ந்தவர்கள் பெருமளவு வேற்று நாட்டினரும், வேறு திணை நிலங்களில் வாழ்ந்த மக்கள் என்பது புலனாகும்.

கி.பி. 9ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த இடைக்கால சோழராட்சியில் அருண்மொழித் தேவச்சேரி, ராச மார்த்தாண்டச் சேரி, குந்தவைச் சேரி, சன நாதச் சேரி, நித்த வினோதச் சேரி, சோழ சுந்தரிச் சேரி, தனிச்சேரி, பறைச்சேரி, வண்ணாரச் சேரி, கம்மான் சேரி, ஆரிய பார்ப்பனர் சேரி, தீண்டாச்சேரி போன்ற பல சேரிகள் இருந்ததாகவும், இந்தக் குடியிருப்புகளில் பல இனமக்கள் கலந்து வாழ்ந்ததாகவும் இம்மக்கள் சேர்ந்து வாழும் இடத்தைச் சேரிஎன்றும் பாவாணரின் பழந்தமிழராட்சிஎன்ற நூலில் குறிப்பிடப்படுகிறது.

சேரிகளில் வாழ்ந்தவர்கள் பேசும் மொழிக்கும் ஊர், நகரங்களில் வாழ்ந்தவர் பேசும் மொழிக்கும் வேற்றுமை இருந்த காரணத்தால் அதனை சேரி மொழி என வழங்கியுள்ளனர். கஞ்சி, உறங்கு போன்ற சொற்கள் பழந்தமிழ்ச் சொற்கள். இச்சொற்களைப் பேசுவோர் சேரிகளில் வாழ்ந்தவர்கள். அலை வாழ்நர், பரதவர், இடையர், வலையர், ஆடுவார், பாணர், பறையர், துடியர், கடம்பர், விறலியர், பரத்தையர், ஒளியர், அருவாளர், ஈழவர், யவனர், ஆரியப் பார்ப்பனர் போன்றவரும் மற்றும் தமிழகத்தின் மீது படையெடுத்து வந்த மோரியார், கோசர், மழவர் போன்றவர்களின் படைவீரர்களில் சிலர் தமிழகத்தில் நிலைத்து, தமிழ் வேந்தர் படையில் சேர்ந்து பணியாற்றியவர்களும் இச்சேரிகளில் வாழ்ந்தவர்களாவர் என்று சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

மேலும் ரோமர், கிரேக்கர்கள் வணிக நோக்கோடு தமிழகத்துக்கு வந்து இங்கு அரண்மனை வாயில் காப்பாளராகவும், அரண்மனைப் பணிப் பெண்களாகவும் இருந்துள்ளனர் என்றும், பல்லவர் படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட களப்பிரரும் (ஆய்வுக்குரியது), விஜய நகரப் பேரரசு படையெடுப்புடன் வந்து தமிழகத்தில் நிலைத்துவிட்ட அருந்ததியரும் ஆகிய பல இனத்தவர், பல நாட்டினர், பல மொழியினர் கலந்து வாழ்ந்த இடத்தைச் சேரி என்றும், அவர்கள் திருத்தமான மொழி பேசாமல் கொச்சை மொழிப் பேசியதால் சேரி மொழியென்றும் வழங்கியுள்ளனர்.

பல்லவர் காலத்திலும் அந்தணச் சேரி, முட்டிகைச் சேரி, பரத்தையர் சேரி, புறம்பனைச் சேரி என்று பல சேரிகள் இருந்துள்ளன. தமிழ் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் ஆடுவார் சேரி, பாண்சேரி, வலை வாழ்நர் சேரி, பரதவர் சேரி, புறஞ்சேரி, முத்துக் குளிப்பவர் சேரி, சங்கு அறுப்பவர் சேரி எனப்பல சேரி வகைகள் இருந்ததாக இலக்கியங்கள் காட்டுகின்றன.


பல இனமக்களும் சேர்ந்து வாழுமிடத்தைக் குறித்த சேரிஎன்பது பின்னர் தீண்டாமையின் அடையாளமாக்கப்பட்டுவிட்டது.


No comments:

Post a Comment