Monday 12 February 2018

மரண முக்கோணம் : பெர்முடா தீவு மர்மங்கள் (EPISODE - 1)


ஒரு குறிப்பு :

இந்த கட்டுரை ’வானம் வசப்படும்’ என்கிற தொலைக்காட்சி அறிவியல் நிகழ்ச்சிக்காக எழுதப்பட்டது. ஏறக்குறைய அந்த நிகழ்ச்சி 100 % முடிந்துவிட்ட நிலையில் அதனை தயாரித்த தனியார் தொலைக்காட்சி மூடப்பட்டுவிட்டது. ’வானம் வசப்படும்’ நிகழ்ச்சியில் நான் தொகுத்து வழங்கவிருந்த அறிவியல் விஷயங்களை தொடர்ந்து உங்களுடன் ஒவ்வொன்றாக பகிர்ந்து கொள்கிறேன்.  

வானம் வசப்படும்

Science and  Information Programme

எழுத்து - இயக்கம்

ஆத்மாநாம் விஜயதாஸ்






Concept One

மரண முக்கோணம் : பெர்முடா தீவு மர்மங்கள்

Episode - 1

Anchor cut

நேயர்கள் அனைவருக்கும் வானம் வசப்படும் என்ற அறிவியல் மற்றும் பல்சுவை நிகழ்ச்சியின் முதல் வணக்கம் !

மனித நாகரிகம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு இன்று வளர்ந்து பரந்து விரிந்துகிடக்கின்றது. ஒவ்வொருநாளும் எத்தனையோ கருவிகள், புதிய கண்டுபிடிப்புகள், புத்தம்புதிய விளக்கங்கள் தோன்றியவண்ணம் இருக்கின்றன. மனிதன் என்றைக்கு தோன்றினானோ அன்றைக்கே அறிவியலும் தோன்றிவிட்டது.

ஆதிமனிதன் எந்த இரண்டு கற்களை தேய்த்தால் நெருப்புவரும் என்று நினைத்தானோ அன்றைக்கே அறிவியலும்  பிறந்துவிட்டதுஅந்த நெருப்பில் மாண்ட விலங்குகளின் மாமிசத்தை ருசித்த உடன் உண்ணும் முறையும் வந்துவிட்டதுவிலங்கை மூதாதையராக கொண்ட மனிதன் தான் பின்னாளில் அதை பழக்கவும் கற்றுக்கொண்டான்.


Programme Title  (வானம் வசப்படும்) 

நாம் வாழும் இன்றைய உலகம் நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் ஏராளமான அதிசயங்களையும், ஆச்சரியங்களையும் பூட்டிவைத்திருக்கிற பெருங்கடலாக நம்முன்னே உள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் பலவற்றை காண்கிறோம்; கேட்கிறோம்; உணர்கிறோம்; அவற்றில் சிலவற்றை நம்புகிறோம்; சிலவற்றை நம்பமறுக்கிறோம்.

சூரியன் தினமும் கிழக்கில் தோன்றி மேற்கில் சாய்வதைக் கண்டதால் அது பூமியை சுற்றுகிறது என்று ஒரு காலத்தில் நம்பினோம்.ஆனால் இன்றைய விஞ்ஞானம் அதை பொய்ப்பித்துவிட்டது. பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்கிற சரியான முடிவுக்கு இன்று வந்திருக்கிறோம்.

நேற்று விளக்க முடியாதது இன்று விளக்கப்படலாம். இன்று விளங்க முடியாதது நாளை விளக்கம் பெறலாம். ஆனால் மனிதன் ஆரம்பம் முதலே ஒரு ஆராய்ச்சிப்பிராணி. அவன் தொட்டது துலங்கும் என்பது வரலாற்று ரீதியாக கண்டறியப்பட்ட மாபெரும் உண்மை.


அந்த உண்மைகளையும், விஞ்ஞான அதிசயங்களையும், விந்தை தகவல்களையும், கரைகாணா மர்மங்களையும், காலம் போற்றிய கண்டுபிடிப்புகளையும் தேடிக்கொண்டு வந்து உங்கள் கைகளுக்குள் சேர்க்கும் நிகழ்ச்சிதான்  வானம் வசப்படும்.


Episode Promo





இன்றைய நிகழ்ச்சியில் நாம் பார்க்கப்போவது உலகவரைப்படத்தில் மர்மமான ஒரு தீவாக விளங்கும் பெர்முடாமுக்கோணம். விஞ்ஞானத்திற்கே சவால் விடக்கூடியவகையில் இதுவரை ஏராளமான கப்பல்களும் விமானங்களும் மனிதர்களும் அதிசயமானமுறையில் காணாமல் போயிருக்கும் கடல்பிரதேசம்தான் பெர்முடா மரணமுக்கோணம்

நாம் வாழும் உலகம் விந்தையானது மட்டுமல்ல வியப்பானதும் கூட. விஞ்ஞானத்திற்கு புலப்படாத பலதரப்பட்ட மர்மங்கள் உலகில் இன்றும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த மரமங்களின் முடிச்சுகள் அவிழ்க்கப்படாமலேயே தான் காலச்சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. அவ்வாறான மர்மங்களில் ஒன்று தான் பெர்முடா முக்கோணம். 

Episode Title (மரண முக்கோணம்)


இதுவரை 40 கப்பல்களையும், 20 விமானங்களையும்இன்னும் ஏராளமான  மரக்கலங்களையும் இந்த பெர்முடா முக்கோணம் கபளீகரம் செய்திருக்கிறது. அவற்றிலிருந்து ஒரு சிறுபாகம் கூட இன்றுவரை கிடைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனிதர்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அவர்கள் என்ன ஆனார்கள்? எங்கு சென்றார்கள்? என்று இதுவரை தெரியவரவேயில்லை. நம்ப முடியவில்லையா ? ஆனால் அதுதான் உண்மை. இக்கடல் பிரதேசத்திற்கு மேலே சென்ற கப்பல்கள் விமானங்கள் பற்றி இன்று வரை எந்தத் தடயமுமே கிடைக்கவில்லை. உலகில் உள்ள பலரையும் ஆச்சரியப்படவைத்துள்ள இந்த பெர்முடா முக்கோணத்தின் மர்மங்கள், அதற்காக கூறப்படும் காரணங்கள் பற்றிய ஒரு விசாரணை தான் நம் இன்றைய நிகழ்ச்சி.


Episode Promo (Repeat)


Voice Over 

வடஅட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவின் ஃபுளோரிடாவுக்கு கிழக்காக, பூமியின்  தீர்க்கரேகைக்கு மேற்காக 40 டிகிரியில் பெர்முடா, மியாமி, ஃப்யூர்டோரிடா இந்த மூன்று பகுதிகளையும் இணைத்து ஒரு கோடு வரைந்தால் ஒரு முக்கோணப்பகுதி கிடைக்கும். அந்த மரணப் பிரதேசத்துக்குப் பெயர்தான் பெர்முடா முக்கோணம். உலகின் மர்மமான ஒரு தீவு.




Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)

பெர்முடா முக்கோணம்னு சொல்லக்கூடிய அந்த பகுதியில போகிற கப்பல்களும் விமான்ங்களும் காணாமல் போறது.. இதப்பத்தி ஒரு 200 வருடங்களுக்கும் மேலாகவே பேசிட்டு வர்றாங்க. அந்த காலத்திலேயே அட்லாண்டிஸ் அப்படிங்கற புதைந்து போன நகரத்தை பத்தி பேசினாங்க. அப்ப அதோட முக்கியத்துவம் என்ன? ஏன் இந்த மாதிரி விஷயங்கள் வந்து மக்களை ஈர்க்கிறது? அந்த ஒரு கேள்வி எல்லோருக்குமே இருக்கு. அப்படி பாக்கறப்போ இந்த பெர்முடா டிரையேங்கள் பத்தி நிறைய கதைகள் வந்திருக்கு. நிறைய படங்கள் வந்திருக்கு. மக்கள் அதிகம் பேசக்கூடிய விஷயங்களா இருக்கு.

Anchor cut

மரணமுக்கோணம் என்று வர்ணிக்கப்படும் இந்த கடல்பிரதேசம் குறித்து ஏராளமான கதைகளும், கருத்துகளும், காரணங்களும், விஞ்ஞான விளக்கங்களும் சொல்லப்பட்டு வருகின்றன.

கதை ஒன்று

Voice Over

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு போர்னிசீயர், கார்தகீனியர் சார்காஸா கடலை கடக்கும்போதே பெர்முடா முக்கோணம் பற்றிய கதைகளும், மர்மங்களும்  தொடங்கிவிட்டன.

பழங்காலத்தில் இங்கு அட்லாண்டிஸ் என்னும் ஒரு தீவு இருந்ததாகவும், அங்கு மிகச்சிறந்த ஆற்றல்வாய்ந்த ஆதிவாசிகள் தங்கள் படைக்கலன்களுடன் வாழ்ந்து வந்ததாகவும், அவர்களின் ஆவிகளே கடலுக்கடியில் மறைந்திருக்கும் இயந்திரங்கள் மூலம் கப்பல்களையும், விமானங்களையும் கொண்டு செல்கிறது என்று கூறப்படுகிறது.

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)


இப்ப உலக நாகரீகங்களில் இந்த லெமூரியா, அட்லாண்டிஸ் அப்படின்னு சொல்லக்கூடிய கடலுக்கடியில் மூழ்கிப்போன நகரங்கள பத்தி நிறைய புராணக் கதைகள் இருக்கு. அப்படி பாக்கறப்போ சில சமயம் கடலுக்கடியில் உள்ள மலைத் தொடர்களின் உச்சிகள் தீவுகளாயிருந்து, அந்த தீவுகள் கடலுக்கடியில் போவதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கு. அதாவது நிறைய தீவுகள் கடலில் மூழ்குது. நிறைய தீவுகள் கடலில் உருவாகுது. அந்த அடிப்படையில் பாக்கறப்போ இந்த மனிதகுல நம்பிக்கைகளில், அந்தக்கால கடலோடிகள் கடலுக்கடியில் ஒரு நகரம் இருக்கிறதென்கிற  நம்பிக்கை வந்து இன்னக்கி அதிகமாகவே இருக்குது. அப்ப அந்த விஷயத்தை தொல்லியல் பார்வையில தான் பார்க்கணுமே தவிர புராணங்களின் பார்வையில் பார்க்கக் கூடாது.

Anchor Cut 

உலகில் நம்பமுடியாத விஷயங்கள் எது நடந்தாலும் ஓவ்வொன்றுக்கும் அதற்கேயுரிய ஆதரவாளர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்நாம் அடுத்த கதைக்கு செல்வோம்.


Voice Over 

அறிவிலும், தொழில்நுட்பத்திலும் மனிதனைவிட மேலானவர்களாக விளங்கும் வேற்றுகிரகவாசிகள் தான் இந்த மர்மங்களுக்கு காரணம் என்றும், தங்களின் ஆராய்ச்சிக்காக அவர்களே கப்பல்களையும், விமானங்களையும் பிடித்துச் சென்றிருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. தங்களின் ஆராய்ச்சிக்காக அவர்கள் பெர்முடாமுக்கோணத்தை தேர்ந்தெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)


கடந்த 40 வருடங்களாக ஆய்வு பண்றப்போ 200 வருடங்களாக பேசப்பட்ட விஷயங்கள் வந்து அறிவியல் பூர்வமா நிரூபிக்கப்பட்டிருக்கா அப்படின்னா அப்படி நிரூபிக்கப்படலைன்னு தான் சொல்லணும். ஏன்னா அந்த புராணங்கள் கதைகள் அப்படிங்கறது இன்னும் நம்பிக்கைக்குரிய விஷயமாகவும், அறிவியல் அப்படிங்கறது ஆராய்ச்சிக்குரிய விஷயமாகவும் தொடர்ந்து இருந்திட்டிருக்கு.

 Anchor Cut 

ஐவான் சாண்டர்சன், மேன்சன் வாலண்டின் போன்றவர்கள் கூறும் இந்த கருத்து சற்றே அறிவியல் சாயலை கொண்டிருந்தாலும் ஏற்கனவே பறக்கும்தட்டுகள், அயல்உலகவாசிகள் வந்துபோனதற்கான தகவல்கள் உறுதிசெய்யப்படாமல் அப்படியேதான் இருக்கிறது.

ஆனால் இதுகுறித்து கட்டுக்கடங்காத கற்பனைகளும், கதைகளும் உருவாகி உலகை வலம் வந்து கொண்டேயிருக்கிறது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் கூட இந்த பெர்முடா நிகழ்வுகளின் பாதிப்பில் CLOSE ENCOUNTERS OF THIRDKIND என்ற திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


CLOSE ENCOUNTERS OF THIRDKIND Mini Trailer


Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)


தமிழகம் வந்து இந்த பெர்முடா முக்கோணத்தை பற்றி பேசறதுக்கு என்ன காரணம்னா உலகின் மிகச்சிறந்த கடலோடியா தமிழர்கள் இருந்திருக்காங்க. எல்லா கடல் பத்தியும் இவர்களுக்கு தெரிந்திருக்கு. அப்ப அந்த நிலையில குறிப்பா கடல் மேலாண்மை கொண்ட மக்கள், அதன் வழிவந்த மக்கள் அப்படிங்கற முறையில நாம் பாக்கறப்போ நமக்கு அறிவியல் பின்னணியும் இருக்கு. அதே சமயத்தில மரபுசார் அறிவையுடைய தாக்கங்களுக் நம்ம கிட்ட இருக்கு. இன்னும் சொல்லனும்னா எல்லாத்துக்கும் தமிழர்களாகிய நம்ம கிட்ட Reference இருக்கு.

Anchor cut

எது எப்படி இருந்தாலும், பெர்முடா முக்கோணம் பற்றி பலரின் கவனத்தையும் திருப்பியது அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான FLIGHT19 என்ற ஐந்து விமானங்கள் காணாமல்போனது சம்பந்தமாக George X.Sand எழுதியகொல்லைப்புறத்தில் கடல் மர்மம்என்ற கட்டுரைதான்.

அதனைத் தொடர்ந்து பலர் இதே போல் பெர்முடா முக்கோணம் குறித்து அமானுஷ்யங்கள் கலந்து எழுதத் தொடங்கினர். அதில் சொல்லப்பட்ட விஷயங்கள் பெர்முடா முக்கோணத்தை மேலும் மர்மமான பிரதேசமாக ஆக்கியது.


Montage

Voice Over

ஆனால் இந்த மர்மங்களுக்கு மாயசக்திகள்தான் காரணம் என்பதை பொய்யாக்கும் வகையில் லாரன்ஸ் டேவிட் குசே என்பவர், THE BERMUDA TRIANGLE MYSTERY : SOLVED  என்ற நூலை எழுதி வெளியிட்டார்அதில் அவர் பெர்முடா பகுதி தொல்லைகளுக்கு மனிதத்தவறுகளும், சூறாவளி தாக்குதல்களும்,, கடலுக்கு அடியில் ஓடும் வளைகுடா நீரோடைகளும், மிகப்பெரிய முரட்டு அலைகளும், கடற்கொள்ளையர்களும்  காரணம் என்றும் சில பத்திரிகையாளர்கள் தங்களின்  வியாபார நோக்கத்திற்காக பெர்முடாமுக்கோணத்தை பயன்படுத்திக்கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

Episode Title (மரண முக்கோணம்)


Short Break

Episode Title (மரண முக்கோணம்)

இந்த காரணங்கள் மட்டுமல்லாமல் இன்னும் பலரும் பல்வெறு காரணங்களை கூறிக்கொண்டுதான் இருக்கிறார்கள். அது ஒருபுறம் இருந்தாலும் பெர்முடா முக்கோணப்பகுதியில் இதுவரை நிகழ்ந்த சம்பவங்களை பட்டியலிட்டால் நமக்கே மூச்சு முட்டக்கூடும்.


Episode Promo & Flight Missing Montage


Voice Over 

1945, டிசம்பர் 5, அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான Flight -19 என்ற ஐந்து குண்டுவீசும் போர்விமானங்கள் தங்களது வழக்கமான பயணத்தை ஃபுளோரிடா ஃபோர்த் லாடர்டெல்லிலிருந்து தொடங்கியது. ஐந்து போர் விமானங்களும், பெர்முடா முக்கோணத்தின் மீது கிழக்கு நோக்கி 1700 கிலோமீட்டர் வரை செல்வதே அவர்களது இலக்காக இருந்தது. கிளம்பிய 2 மணி நேர அளவில், ஐந்து விமானங்களும் விமானத்தள  கட்டுப்பாட்டில் இருந்து மறைந்தது. மொத்தமாக ஐந்து விமானங்களும் காணாமல் போயின. நேரடியாக விமானத் தளத்திற்கு தொடர்பு ஏதும் கிடைக்கவில்லையென்றாலும், விமானிகள் தொடர்பு கொள்ள முயற்சித்திருப்பது தெரியவந்தது. அருகில் சென்று கொண்டிருந்த பெரிய கப்பல்கள் அவர்களின் சிக்னலை ரிசீவ் செய்திருக்கிறார்கள். ஐந்து விமானங்களும் அவர்கள் செல்லவேண்டிய திசையில் இருந்து விலகி வேறு திசையில் பறந்திருப்பது தெரியவந்தது. அவர்கள் பெர்முடா முக்கோணத்தில் விழவில்லை. அருகில் இருக்கும் ஏதாவது தீவுகளில் விழுந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் சொன்னாலும் இன்றுவரை விமானத்தின் ஒரு சிறு பாகம் கூட கிடைக்கவில்லை என்பது பெரும் ஆச்சரியம். 

Voice Over Continue ... 


அதன் பின்னர் மர்மமான முறையில் கப்பல் ஒன்று காணாமல் போய், அதை மீட்பதற்காக சென்ற 13 பேர் அடங்கிய கடற்படை விமானமும் காணாமல் போனது. இதைப்பற்றியும் இன்றுவரை எந்த விவரமும் தெரியவரவில்லை.

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)


பெர்முடா முக்கோணம் என்று சொல்லப்படுகிற பகுதியில் வரக்கூடி அந்த நீரோட்டம், அதிலிருக்கிற நீர்ச்சுழல்கள், அந்த நீர்ச்சுழலில் மாட்டக்கூடிய கப்பல்களும், அதனால் ஏற்படக்கூடிய நிகழ்வுகளையும் கடலின் ஆழ்மட்டத்தில் ஒரு 9 ஆயிரம் அடியில கொண்டுபோய் விட்டிர்றது இப்ப பதிவாயிருக்கு. அப்ப இந்த கப்பல்கள் காணாமல் போனது உண்மை என்பதும் நிரூபணமாயிருக்கு. அதே சமயம் அந்த நீர்ச்சுழல்கள் உருவாகறப்போ அந்த வான் மண்டலத்தில ஏற்படுகின்ற சுழற்காற்று. அந்த சுழற்காற்றும் இதன் வழி போகின்ற விமானங்கள விபத்துக்குள்ளாக்கியிருக்கு. இப்ப எல்லோருக்கும் ஒரு சந்தேகம் என்னன்னா ஏன் அந்த பகுதியில போற கப்பல்களும், விமானங்களும் தொடர்பு எல்லைக்கு வெளியே போயிடுது. அப்ப அங்க என்ன தான் நடக்குது அப்படின்னு ஒரு கேள்வி இருக்கு.

Anchor Cut

பெர்முடா விஷயத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் Flight-19 சம்பவத்தையே முதலாவதாக கூறினாலும் இதற்கும் முன்னதாக 1872 ஆம் ஆண்டும், 1864 ஆம் ஆண்டும் பேய்க்கப்பல் என்று வர்ணிக்கப்படும் மேரி செலஸ்டி எனும் பெயர் கொண்ட இரு கப்பல்கள் பெர்முடா பகுதியில் மறைந்து போன கதையும் உண்டு. ஆய்வாளர்களால் Ghost Ship என்று அழைக்கப்படும் இந்தக்கப்பல் குறித்த தகவல்கள் பழைய செய்தித்தாள்களில் காணப்படுவது இன்னுமொரு சுவாரசியம். அது குறித்து சிறியதொரு வர்ணனை.


Voice Over

1872 நவம்பர் மாதம் நியூயார்க் துறைமுகத்தில் இருந்து கானா நோக்கி மேரி செலஸ்டி என்ற சொகுசுக்கப்பல் கிளம்புகிறது. ஐரோப்பிய கடற்கரை வழியாக பயனத்தை தொடர்ந்த ந்த கப்பல் அட்லாண்டிக் கடலின் நடுப்பகுதியில் அசோரிஸ் வழியாக சென்றுகொண்டிருக்கும்போது அதே ழியாக வந்த டே கிரேஷியா என்ற பிரிட்டிஷ் கப்பலில் இருந்தவர்கள் தொடர்புகொள்ள முயன்றார்கள். கப்பலில் இருந்து எந்த சிக்னலும் கிடைக்காததால் சிறுபடகுகள் மூலம் அந்தக் கப்பலின் உள்ளே சென்று பார்த்தார்கள்.


Anchor Cut

ஒருவகையில் அங்கு சென்றபோது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது என்று சொல்லலாம். கப்பலின் உள்ளே இருந்த எல்லா பொருட்களும் அதனதன் இடத்தில் இம்மிபிசகாமல் வைக்கப்பட்டிருந்தாலும் மனிதர்கள் மட்டும் எங்கு போனார்கள்? என்ன ஆனார்கள்? என்பது மிகப்பெரிய மாயப்புதிராக இருந்தது. ஒருவேளை அது பேய்க்கப்பலாக இருக்குமோ என்று அவர்கள் அலறியடித்துக்கொண்டு வந்தது பின்னர் தனிக்கதை. அதன்பின்னர் ஆளில்லாத அந்த பேய்க்கப்பல் ஒரு ஆப்பிரிக்க கடற்கரையில் கண்டுபிடிக்கப்பட்டது. சம்பவம் நடந்து இத்தனை வருடங்கள் கழிந்தும் மேரி செலஸ்டி கப்பலில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்று இதுவரை தெரியவரவேயில்லை.

ஆனால் சில ஆய்வாளர்கள் மேரி செலஸ்டி கப்பல் பெர்முடா முக்கோணத்தில் பயணித்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றே சொல்கின்றனர்அதனால் என்ன? நமது கற்பனை கதாசிரியர்களுக்கும், ஹாலிவுட் இயக்குநர்களுக்கும்  மேரி செலஸ்டி பற்றிய இந்தக்கதை நல்லதொரு வாய்ப்பாக அமைந்துவிட்டது. அதுமட்டுமாகப்பல் மர்மங்களின் வரலாற்றில் மேரி செலஸ்டி கப்பல் பற்றியும் பதிவு செய்யப்பட்டுவிட்டதுதொடர்ந்து மற்ற நிகழ்வுகளையும் பார்ப்போம்


Voice Over

1812-ஆம் ஆண்டு டிசம்பர் 30 தெற்கு கரோலினாவில் இருந்து நியூயார்க நகரத்திற்கு சென்ற பேட்ரியாட் கப்பலில் பயணம் செய்த அமெரிக்க ஜனாதிபதி ஆரான்பர் (Aaron Burr) மகள் தியோடோசியா பர் அல்டான்ஸ் என்பவர் மர்மமான முறையில் காணாமல் போனார். அதற்கு பிறகு அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை. கடற்கொள்ளை மற்றும் போர் நடவடிக்கைகள் காரணங்களாக கூறப்பட்ட போதும், இந்த மர்மத்துக்கு பின்னால் முக்கோணத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்)



8500 மீட்டர் ஆழம் கொண்ட அந்த கடல் பகுதி இந்த ஆழம் குறைவான மெக்சிகன் கல்ஃப் என்று சொல்லக்கூடிய கடல் பகுதியில் வரக்கூடிய கப்பல்கள், அந்த கடலில் விழக்கூடிய விமானங்கள் இது எல்லாமே கடலடி ஆழத்தில் கொண்டுபோய் சேர்ந்திருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம். அந்த முறையில அறிவியல் பின்னணியில் இருந்து பாக்கறப்போ இந்த நிகழ்வு நடந்திருக்கலாம். ஆனால் அந்த நிகழ்வுக்கு பின்னணி புராணங்கள் கிடையாது. அது ஒரு நடைமுறை வாழ்வியல்னு தெளிவாக சொல்லலாம்.

Voice Over

இதன் தொடர்ச்சியாக 1918 ஆம் ஆண்டு பார்ப்படோஸ் தீவிலிருந்து கிளம்பிய USS CYCLOPS எனும் பயணிக் கப்பல் ஒன்று தனது 309 ஊழியர்களுடன் சுவடே இல்லாமல் தொலைந்து போனது உலகில் உள்ள எல்லோரையும் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்க கடற்படை வரலாற்றில் போருடன் தொடர்பில்லாத மிக அதிகமான உயிரிழப்பு நிகழ்ந்த சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

1948 ஆம் ஆண்டு டிசம்பர் 28 அன்று டக்ளஸ் டிசி-3 என்ற விமானம் பியூர்டோ ரிக்கோவின் சான் ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் 32 பேருடன் பெர்முடா பகுதியில் மாயமாய் மறைந்து போனது. அதில் பயணம் செதவர்களை பற்றிய எந்த தகவலும் அதற்கு பின் கிடைக்கவில்லை. பயணிகள் பற்றிய விமானத்துறை வாரிய விசாரணை குறித்த ஆவணத்தில் இருந்து விமானம் காணாமல் போனதை உறுதி செய்யும் குறிப்பு ஒன்று பின்னர் கிடைத்தது.


Voice Over Continue…

1963 ஆம் ஆண்டு எஸ்.எஸ்.மரைன் சல்ஃபர் குயின் என்ற எண்ணெய் கப்பல் ஒன்று புளோரிடா பாதைகள் அருகே தனது 39 பயணிகளுடன் காணாமல் போனது. இதுகுறித்து அர்கோசி இதழில் எழுதிய வின்செண்ட் கேடிஸ் என்ற அமேரிக்க எழுத்தாளர் ‘’ கப்பல் காணமுடியாத இடத்திற்கு சென்றுவிட்டதாக’’ குறிப்பிட்டார். ஆனால் கடலோர காவல் படையோ கப்பல் மிகமோசமாக பராமரிக்கப்பட்ட வரலாற்றை சுட்டிக்காட்டியது. 

Anchor cut


இந்த பெர்முடா முக்கோணத்தில் காணாமல்போன கப்பல்கள் மற்றும் விமானங்கள் பற்றிய சுருக்கமான வரலாறு தான் நாம் இப்போது பார்த்தது. மேலும் இந்த நிகழ்வுகளை விளக்குவதற்காக பெர்முடா முக்கோணம் பற்றி எழுத வந்த எழுத்தாளர்கள் பலரும் ஏராளமான அமானுஷ்ய கருத்துகளை பயன்படுத்தியுள்ளனர். ஒரு வகையில் Myth என்றும் Mystery என்றும் சொல்லப்படும் வட அட்லாண்டின் தொன்மம் குறித்த புராண வகையிலான கருத்து தான் அது. 

Voice Over

பஹாமா மாகாணத்தின் வடக்கு பிமினித் தீவில் தண்ணீருக்கடியில் பிமினிப் பாதை என்றும், பிமினிச் சுவர் என்றும் கூறப்படும் பாறைப்படிவம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 0.8 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த பாறைப்படிவத்தில் சதுரமான சாலை போன்ற அமைப்பும், படிக்கட்டுகள் மற்றும் தூண்கள் போன்ற அமைப்பும் காணப்பட்டன. பழங்காலத்தில் புதைந்துபோன அட்லாண்டிஸ் எனும் புராதன நகரத்தின் சுவடுகள் தான் இவை என்பதாக சொல்லப்படுகிறது.  

Atlantis Montage

இன்னும் சிலர் இந்தப்பாதையை சுவர் அல்லது வேறு மாதிரியான கட்டமைப்பின் உருவாக்கம் என்றும் சொல்கிறார்கள். ஆனால் மண்ணியல் ஆய்வாளர்கள் இதனை இயற்கையாக அமைந்த ஒன்று என்றே சொல்கிறார்கள். இந்த நகரத்தின் வரலாறு குறித்து ஏராளமான நாவல்களும், திரைப்படங்களும் வந்திருக்கின்றன. 

Atlantis more other Film Visuals

Byte 
(சிவ.சுப்ரமணி / கடல்சார் ஆய்வாளர்) 

கடலில் காணாமல்போன கப்பல்கள், அதன் மேலே தட்பவெப்ப நிலையில் மறைந்துபோன விமானங்கள் இது எல்லாமே அறிவியல் முறையில அதுவும் கடல் மேலாண்மை (Ocean Management) துறையில் ஆய்வு செய்து மிகத்தெளிவா கொண்டு வரலாம். இன்னக்கி அது சம்பந்தமான தொழில்நுட்பங்கள் உலக நாடுகளில் நன்றாகவே வளர்ந்திருக்கு. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்தாலும் அந்த தொழில்நுட்பத்தை கையாளக்கூடிய தன்மை இந்த கடலை அடிப்படையாக கொண்டு வாழும் இந்த மக்களுக்கு நிறைய இருக்கு. அதனால் இந்த நிலம் சார்ந்த அறிவியல் அறிஞர்கள் அந்த பெர்முடா பகுதியில் ஆய்வு செஞ்சாங்கன்னா புதிய கோணத்தில் வரலாற்றை ஒரு மீளாய்வு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும். 

Anchor cut   

மனிதனால் அறிந்து கொள்ள முடியாத எத்தனையோ விந்தையான புதிர்களுக்கு விஞ்ஞானம் விடை கண்டுபிடித்துள்ளது. பெர்முடா முக்கோணம் குறித்த மர்மங்களுக்கும் ஒரு இறுதியான விடை கிடைக்காமலா போய்விடும். அதுவரை காத்திருப்போம். வானம் மீண்டும் வசப்படும்

End Credits (Rolling Title)

(தொடரும்)





No comments:

Post a Comment